சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தினமும் நடைபெறும் பணிவிடைகள் :
சுவாமித்தோப்பு பதியில் தினமும் மூன்று வேளை பணிவிடை நடைபெறுகிறது .
1. காலை பணிவிடை
2. நண்பகல் பணிவிடை
3. மாலை பணிவிடை
காலை பணிவிடை :
சுவாமித்தோப்புப் பதியில் அதிகாலை மூன்று மணிக்கு சங்கொலிமுழங்க திருநடை திறக்கப் படுகின்றது.
அதன் பின்னர் ஒருவர் சங்கினை ஊதிய வண்ணம், வெண்கல மணியை அடித்தபடி தலைமைப்பதி அமைந்துள்ள தெருக்களில் வலம் வருகின்றார்.
அதன் பின்னரே உகப்படிப்பும் , விளக்கு மணி ஒலித்தலும்,வாகனப்பவனியும் நடைபெறுகின்றது.
வாகனம் வடக்கு வாசலில் வந்ததும் அங்கு மணியை ஒலித்தபடி அன்னப்பால் தருமம் நடைபெறுகின்றது.
வாகனப் பவனி நிறைவுற்றதும் சங்கொலி முழங்க பால் மணி அடித்து அன்னப்பால் ( நித்தியப்பால் ) தரும்மும் பக்தர்களுக்கு வழங்கப் படுகின்றது. இத்தோடு காலைப் பணிவிடை நிறைவடைகிறது.
நண்பகல் பணிவிடை :
சுவாமித்தோப்புப் பதியில் நண்பகல் பணிவிடை மதியம் சுமார் 12 மணியளவில் தொடங்குகின்றது.
அப்போது சங்கொலி முழங்க, மணியோசையை எழுப்பி அய்யா நடை திறக்கபடுகிறது .
அதன்பின்னர் உச்சிப்படிப்பு நடைபெறுகிறது .அதன் பின்னர் அன்பர்களுக்குத் திருநாமம் இடுதல், சந்தனப்பால், இனிமம் போன்றவை வழங்கப்படுகின்றன.
அதன் பின்னர் வடக்கு வாசலில் மணியோசையை எழுப்பியவாறு தவணைப்பால் தருமம் வழங்கப்படுகின்றது.
மாலை பணிவிடை :
சுவாமித்தோப்புப் பதியில் மாலை நான்கு மணிக்கு மாலை நேர பணிவிடை ஆரம்பமாகிறது.
அப்போது சங்கொலி முழங்க, மணியோசையை எழுப்பி அய்யா நடை திறக்கபடுகிறது. அதன் பின்னர் வடக்கு வாசலில் உகப்படிப்பு, வாழப்படிப்பு போன்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இவை நிறைவு பெற்ற பின்னர் அன்ன தருமம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ் அன்ன தருமத்தை உம்பான் என்றும் கூட்டாஞ் சோறு என்றும் கூறுகின்றனர்.
அன்ன தருமம் வழங்கி முடிந்தவுடன் கிழக்கு வாசலில் விளக்கு மணி ஒலித்து வாகனப்பவனி நடைபெறுகின்றது.
வாகனப் பவனி நிறைவுற்ற பின்னர் சந்தனப்பால் வழங்கி உகப்படிப்பு நிகழ்த்தப்படுகின்றது.
அய்யா உண்டு

0 Comments